2.5 மில்லியன் டொலர் சைபர் குற்றச் செயல்.. இது முதல் முறை அல்ல.. உலகம் முழுவதும் நடக்கிறது.. இங்கு மட்டும் நடந்த மேஜிக் அல்ல..

கருவூலத்திலிருந்து (Treasury) 2.5 மில்லியன் டொலர் பணம் காணாமல் போனது இலங்கைக்கு மட்டும் உரித்தான ஒரு விசேட சம்பவமோ அல்லது வரலாற்றில் முதன்முறையாக நடந்த மேஜிக் சம்பவமோ அல்ல என்று அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர், சைபர் குற்றங்கள் மூலமாக இடம்பெறும் இதுபோன்ற நிதி இழப்புகள் உலகின் எந்தவொரு நாட்டிலும் நிகழக்கூடும் எனக் கூறினார்.
இது குறித்து இலங்கை கணினி அவசர கால பதிலளிப்புக் குழு (Sri Lanka CERT) மற்றும் பாடத்துறை சார்ந்த நிபுணர்களுக்கு அறியத்தரப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அது தொடர்பில் தேவையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் இன்டர்போல் (INTERPOL) அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளை மேற்கோள் காட்டிய அமைச்சர், சைபர் குற்றங்கள் காரணமாக ஆசிய பிராந்தியத்திலும் உலகளவிலும் உள்ள பொருளாதாரங்களுக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து அந்த நிறுவனங்கள் தொடர்ந்து அறிக்கையிட்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
ஹேக்கர்கள் பல்வேறு சிக்கலான முறைகளைப் பயன்படுத்தி இத்தகைய குற்றங்களைச் செய்வதாகவும், இது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒரு உலகளாவிய அச்சுறுத்தல் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இச்சம்பவத்தை இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நடந்த ஒரு விசித்திரமான சம்பவமாக சித்தரிக்க சில தரப்பினர் முயற்சிப்பதாக விமர்சித்த அமைச்சர், இது வெறும் பணத்தாள்கள் காணாமல் போனது மட்டுமல்லாமல், முழுப் பொருளாதாரத்தையும் பாதிக்கும் ஒரு சிக்கலான சைபர் குற்றச் செயல்பாட்டின் ஒரு பகுதி என்றும் வலியுறுத்தினார்.



