நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்தவர், தனது 23 ஆவது வயதில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யபட்டார்

பாறுக் ஷிஹான்
இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, 3,920 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொட்டம பகுதியில், அம்பாறை பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
தொட்டம கிராமத்தைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர், தொட்டம மற்றும் பன்னல்கம ஆகிய பகுதிகளில் நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அம்பாறை மாவட்டப் பிரிவின் பதில் அதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வீரசிங்க மற்றும் அம்பாறை மாவட்டப் பிரிவு அதிகாரி 1 சம்பத் விக்ரமரத்ன ஆகியோரின் மேற்பார்வையில், அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரா தலைமையிலான குழுவினரால் இச்சோதனை நடத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகத் தமன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தமன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் மனோஜ் அழகியவன்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



