News

அரசாங்கத்தின் இனவாதமற்ற கொள்கையைச் சீர்குலைக்க வைத்தியசாலை நிர்வாகம் முயற்சிக்கிறதா?

அரசாங்கத்தின் இனவாதமற்ற கொள்கையைச் சீர்குலைக்க வைத்தியசாலை நிர்வாகம் முயற்சிக்கிறதா?

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் எச்சரிக்கை கடிதத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கடும் கண்டனம்!
—————————————–

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள 9 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தற்போதைய அரசாங்கம் இன, மத பேதமின்றி அனைத்து சமூகங்களையும் சமமாக நடத்தி, நாட்டில் நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. அரசாங்கத்தின் இந்த நேர்மையான அணுகுமுறையை நாம் வரவேற்கின்றோம்.

இவ்வாறான சூழ்நிலையில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குறித்து பலத்த கவலை எழுகின்றது. இத்தகைய நடவடிக்கைகள் அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், அரசாங்கம் முன்னெடுத்து வரும் நல்லிணக்க முயற்சிகளையும் பாதிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது.

முஸ்லிம் பெண்கள் தமது மத மற்றும் கலாசாரப் பண்பாடுகளைப் பேணி, நடைமுறையில் உள்ள அரச சுற்றுநிரூபங்கள் மற்றும் நிறுவன விதிமுறைகளுக்கு அமைவாக ஆடை அணிந்து கடமையாற்றுவது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக,  இந்த பணியாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்படுவது நியாயமானதா என்பது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

எந்தவொரு அரச நிறுவனத்திலும் பணியாற்றும் ஊழியர்களின் உரிமை, கண்ணியம் மற்றும் சமத்துவம் பாதுகாக்கப்படுவது மிகவும் அவசியமானதாகும். அதேவேளை, நிறுவன விதிமுறைகள் மற்றும் அரச சுற்றுநிரூபங்கள் தொடர்பில் ஏதேனும் முரண்பாடுகள் இருப்பின், அவை அச்சுறுத்தல் அல்லது பாகுபாடு ஏற்படுத்தாத வகையில் கலந்துரையாடல் மற்றும் நியாயமான நிர்வாக நடைமுறைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.

இந்த விடயத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண் பணியாளர்களின் உரிமைகளும் கண்ணியமும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன்.

இதுதொடர்பாக, உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் விடயத்தை உடனடியாகக் கொண்டு சென்று, உண்மை நிலைமையை ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நியாயமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றேன்.

இன நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் பாதிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையும் இடம்பெறாத வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்புடனும் உணர்வுபூர்வமாகவும் செயற்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.” என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button