ஹிரிகெட்டியவில் சட்டவிரோத இஸ்ரேலிய வணிகங்கள் மற்றும் ‘சபாத் ஹவுஸ்’ (Chabad House) மையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் !

தென் மாகாணத்தின் நில்வெல்ல மற்றும் திக்பெல்ல பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர்வாசிகளும் பௌத்த துறவிகளும் இணைந்து, ஹிரிகெட்டிய பகுதியில் இயங்கி வரும் இஸ்ரேலிய மத மையத்திற்கு (Chabad House) எதிராக போராட்டம் நடத்தினர். ஆரம்பத்தில் ஒரு உணவகமாக தொடங்கப்பட்டு, பின்னர் இஸ்ரேலிய கலாச்சார மையமாகவும் யூத தொழுகைக்கூடமாகவும் (Synagogue) மாற்றப்பட்ட இமையம் சட்டவிரோதமாக இயங்குவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பிரதான அவதானிப்புகளும் சர்ச்சைகளும்
• சட்டம் மற்றும் விசா விதிகளை மீறுதல்: சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் வணிக நடவடிக்கைளில் ஈடுபடுவதோ அல்லது வேலை செய்வதோ சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், சில வெளிநாட்டவர்கள் உரிய அனுமதி மற்றும் பதிவு இன்றி சட்டவிரோதமாக வணிகங்களை நடத்தி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
• உள்ளூர் சுற்றுலாத் துறையில் ஏற்படும் தாக்கம்: அப்பகுதியில் உள்ள உள்ளூர் விடுதி உரிமையாளர்கள், அலைச்சறுக்கு (Surf) பயிற்சியாளர்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் இத்தகைய சட்டவிரோத வணிகங்களால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
• அமைதியான சூழலைப் பேணுதல்: ஹிரிகெட்டிய போன்ற பிரபலமான சுற்றுலாப் பகுதிகளில் சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நடத்தையால் உள்ளூர் கலாச்சாரத்திற்கும் ஏனைய சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதே உள்ளூர் மக்களின் முக்கிய கோரிக்கையாகும்.
• அரசாங்கம் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கை: விசா விதிகளை மீறி சட்டவிரோதமாக வணிகங்கள் அல்லது சமூக மையங்களை நடத்துபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



