News

கல்முனை வைத்தியசாலை ஊழியர்களின் ஆடை விவகாரம்: உரிய நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர், றிஷாட் பதியுதீனிடம் உறுதி

கல்முனை வடக்கு வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்ற ஊழியர்களின் ஆடை தொடர்பில் நிலவி வரும் சர்ச்சை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும், தலைவர் றிஷாட் பதியுதீனுக்கும் இடையில் இன்று (15) மாலை விசேட தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, முஸ்லிம் பெண் ஆடை சர்ச்சை தொடர்பில் ஊழியர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் மற்றும் நடைமுறைச் சிக்கல்களை அமைச்சரிடம் எடுத்துரைத்த றிஷாட் பதியுதீன், இவ்விடயத்தில் அவசரமாக உரிய நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, குறித்த விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக றிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் குறித்த வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் வைத்தியர். சுகுணன் அவர்களுடன் ஏலவே பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் கலந்துரையாடி, நிலைமையை பற்றி கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Back to top button