மகாநாயக்க தேரர்களின் கருத்துக்களையும் யோசனைகளையும், ஆலோசனைகளையும் கேட்டு கலந்துரையாடுங்கள்.. நானும் பல்வேறு கருத்துக்கள், தரவுகள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் விடயங்களை முன்வைக்கும் போது அதற்கு சேறு பூசுகிறீர்கள் ;சஜி த்

சங்கைக்குரிய மகா சங்கத்தினர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விடயங்களை நன்றாகச் சிந்தித்து, ஆராய்ந்து, கண்டறிந்து, பரிசீலனை செய்தே நாடு, சமூகம், வழிமுறைகள் மற்றும் கட்டமைப்புகள் என்பன குறித்து மிகவும் முக்கியமான கருத்துக்களையும் யோசனைகளையும் எப்போதும் வழங்கி வந்துள்ளனர்.
பல சந்தர்ப்பங்களில் மக்கள் பிரதிநிதிகள் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி மெறுவதோடு மாத்திரம் நின்றுவிடக் கூடாது, அவர்கள் வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் பெற்றுத் தரும் சமயங்களில் அவற்றை ஒதுக்கித் தள்ளிவிடாமல், ஒரு நிலைக்கு வந்து மகாநாயக்க தேரர்கள் கூறுவது குறித்து ஆராய்ந்து, முன்வைக்கப்படும் யோசனைகள் தொடர்பில் மிகவும் உன்னிப்போடு செயற்பட வேண்டும். இது ஒருபோதும் ஆளுமைக்குப் பங்கம் விளைவிக்காது.
நாடு, மதம் என்பவற்றுக்காக முறையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மகா விஹார வம்சிக சியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து பீடத்தின் சிலாபம் மற்றும் புத்தளம் இரு பிரதான பிரிவுகளுக்குமான சங்கநாயக்க பதவியிற்காகத் தெரிவு செய்யப்பட்ட சித்தம்முல்லே விமல கீர்த்தி ஸ்ரீ ஜினரதன வஜிர நாயக்க தேரருக்கு “நாயக்கர் பதவியின் ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை” வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
தம்மபதத்தில் சுட்டிக்காட்டப்பட்டவாறு பயனுள்ளதை பயனுள்ளதாகவும், அநாவசியமானதை அநாவசியமானதாகவும் காண வேண்டும் என்றும், ஒருவரேனும் பயனுள்ளதை அநாவசியமானதாகவும், அநாவசியமானதை பயனுள்ளதாகவும் காண்கின்றாரெனில், கிலேசங்களை நீக்கிக் கொள்ள முடியாது.
மூன்று பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டுவதற்கு ஏற்ப அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக கனம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது பொருத்தமற்ற செயலாகும்.
அது நீதியை நிலைநாட்டுவதற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் அச்சுறுத்தலாக அமைவதுடன், நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை மங்கச் செய்து, ஜனநாயக வழிமுறையின் வீழ்ச்சியையும் ஏற்படுத்தும்.
இதனை ஏற்றுக்கொள்வது கொள்கை வகுப்பாளர்களின் பொறுப்பாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
ஊடகக் காட்சிப்படுத்தல்களைக் காட்டியது போதும்.
அதேபோன்று இந்த மகாநாயக்க தேரர்கள் நீதித்துறையின் சுதந்திரம், ஜனநாயகத்தின் பாதுகாப்பு, மக்கள் இறைமை மற்றும் இறையாண்மை என்பன பற்றிக் கருத்துக்களை முன்வைக்கும் வேளைகளில், பணிவுடன் நடந்து கொண்டு, தலைக்கனம் காட்டாமல், ஊடகக் காட்சிப்படுத்தல்களை நடத்தாமல், மகா சங்கத்தினரால் முன்வைக்கப்படும் யோசனைகளுக்குத் உரிய மரியாதையைப் பெற்றுக் கொடுத்து, பணிவுடனும், அடக்கமாகவும் நடந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
மனசாட்சிக்கு இணங்கச் செயற்படுங்கள்.
மனசாட்சிக்கு இணங்க மகாநாயக்க தேரர்களின் கருத்துக்களையும் யோசனைகளையும், ஆலோசனைகளையும் சொல்லின் பரிபூரண அர்த்தத்தில் ஆராய்ந்து, அவர்களின் ஆலோசனைகளின் அடிப்படை குறித்துக் கண்டறிந்து, ஏனைய பங்குதாரர்களுடன் கலந்துரையாடுவதில் எந்தத் தவறும் இல்லை.
தானும் பல்வேறு கருத்துக்கள், தரவுகள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் விடயங்களை முன்வைக்கும் வேளைகளில் அவற்றின் மீதும் சேறு பூசுகின்றனர். உண்மைகள் உண்மையானவை எனில் எப்போதுமே தளரக் கூடாது.
இந்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாகவும், நீதிமன்றத்தின் கனம் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது நீடிப்பது தொடர்பாகவும் மகாநாயக்க தேரர்கள் முன்வைத்த யோசனைகள் குறித்து மீளச் சிந்திப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அனைவரும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையுடன் வாழும் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.
சம்புத்த சாசனத்தின் உன்னதம் மற்றும் நிலைபேறலுக்காக உழைப்பது பொறுப்பும் கடமையும் ஆகும். அரசியலமைப்பில் புத்தசாசனத்துக்குச் சிறப்பானதொரு ஸ்தாபனம் வழங்கப்பட்டுள்ளது.
ஆகையினால், புத்தசாசனத்தை வலுப்படுத்துவது, மேம்படுத்துவது, பாதுகாப்பது என்பன நமது பொறுப்பாகும். ஏனைய மதங்கள், இனங்கள் மற்றும் சமூகப்பிரிவுகளுக்கு உன்னத சட்டத்தின் ஊடாக சிறப்பானதொரு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சமூகப் பிரிவும், பிரஜையும் ஒன்றாக இணைந்து சகோதரத்துவத்துடன், ஒற்றுமையுடன், நல்லிணத்துடன் வாழ்வது எமது நாட்டுக்கு பக்க பலமாகும். இந்த ஒற்றுமை பலப்படும் போது எமது இறையாண்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் அரசியல் சுதந்திரம் என்பன உறுதிப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பேச்சில் மாத்திரமன்றி செயலிலும் வேலைகளைக் காட்ட வேண்டும்.
சம்புத்த சாசனத்தைப் பாதுகாக்கும் காவல் தெய்வங்களாக விளங்கும் சங்கைக்குரிய மகா சங்கத்தினர் தற்சமயம் பல்வேறு துன்புறுத்தல்கள், சவால்கள், சிரமங்கள், துயரங்களுக்கு மத்தியிலும் அந்தந்தச் சவால்களை ஏற்றுக்கொண்டு அவற்றை வெற்றிகளாக மாற்றியமைத்து, சம்புத்த சாசனத்தின் பாதுகாப்பிற்காகச் சிறப்பான சேவைகளை ஆற்றி வருகின்றனர்.
சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பது குறித்துப் பேசுவது மாத்திரமன்றி அதனை நடைமுறையில், செயலில் நிரூபிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
பௌத்த மதத்தை அரசியல் இலாபங்களுக்கு மாத்திரம் பயன்படுத்த வேண்டாம்.
எமது நாட்டில் 14,129 விகாரைகளும், 10,347 தஹம் பாடசாலைகளும், 327 சாசன பல மண்டலப் பிரிவுகளும், 824 பிரிவெனாக்களும் காணப்படுகின்றன. இது தொடர்பாக கூடிய கவனம் செலுத்த வேண்டும். பல பிரதேசங்களில் தஹம் பாடசாலைகளுக்கு கிடைக்கும் உரிய அந்தஸ்தும், பக்க பலமும் போதாது.
அரசியலமைப்பில் புத்த மதத்திற்குச் சிறப்பான இடம் காணப்படுகின்றன என்ற வார்த்தைகள் மாத்திரம் போதாது. தஹம் கல்வியை மேம்படுத்துவது போன்று ஏனைய மதங்களுக்குரிய அறநெறிப் பாடசாலைகளையும் மேம்படுத்த வேண்டும்.
இதன் மூலம் நாகரிகமான, ஒழுக்கமான, மதப்பற்றுள்ள நற்பிரஜைகள் தலைமைறை உருவாகும்.
பேச்சுக்கு மாத்திரம் சுருங்கிய பௌத்தமும், அதனை அரசியல் இலாபங்களுக்காக மாற்றிக்கொள்ளும், போலி பிம்பங்களை உருவாக்கும் நாடகங்களில் இருந்து விடுபட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்



