கெஹல்பத்தர பத்மே யிடமிருந்து கைப்பற்றப்பட்ட மொபைல் கைபேசிகளிலிருந்து 7 நடிகைகள் மற்றும் மாடல்கள் மற்றும் 9 அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டன.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தாக்கல் செய்த அறிக்கையின்படி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ‘கெஹல்பத்தர பத்மே’ என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கைபேசிகளிலிருந்து ஏழு நடிகைகள் மற்றும் மாடல்கள், மேலும் ஒன்பது அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சந்தேகநபரின் கைபேசிகளை பரிசோதித்தபோது ஒன்பது அரசியல்வாதிகளின் புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஏழு நடிகைகள் மற்றும் மாடல்கள் தொடர்பான தகவல்களும் வெளிவந்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த கண்டுபிடிப்புகள் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த விசாரணை அதிகாரிகள், அடையாளம் காணப்பட்ட நபர்கள் எந்தவொரு குற்றமும் செய்துள்ளனர் என்பதை இந்த வெளிப்பாடு மட்டுமே உறுதிப்படுத்தாது என்றும் தெரிவித்தனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கூற்றுப்படி, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரிடமிருந்து எட்டு கைபேசிகள் மீட்கப்பட்டன. அந்த சாதனங்களில் இருந்த தரவுகள் அழிக்கப்பட்டிருந்தபோதிலும், விசாரணை அதிகாரிகளால் அவற்றை மீட்டெடுக்க முடிந்தது.
மீட்கப்பட்ட தரவுகளில் 8,841 தொலைபேசி அழைப்புகளின் விபரங்கள், 326,000 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், 1,101 குரல் பதிவுகள் மற்றும் 5,039 வீடியோக்கள் அடங்குவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் 20 பேர் தொடர்பான தகவல்களையும் விசாரணை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதுடன், அவை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
சந்தேகநபரின் கைபேசிகளில் 13 சிறைச்சாலை அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் காணப்பட்டதாகக் கூறப்படுவதுடன், இது குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் நபர்களின் 19 கடவுச்சீட்டுகளின் புகைப்படங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 17 வங்கி கணக்குகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளது.
விசாரணை அதிகாரிகளின் கூற்றுப்படி, கெஹல்பத்தர பத்மே மே 2021 இல் இலங்கையிலிருந்து சட்டப்பூர்வமாக வெளியேறிய பிறகு, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, ரஷ்யா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா மற்றும் லாவோஸ் உட்பட 13 நாடுகளுக்கு சுமார் 15 முறை பயணம் செய்துள்ளார்.
சர்வதேச நடவடிக்கை ஒன்றைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே, பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவரை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



