21 மற்றும் 25 வயதுடைய இருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றை செலுத்திச் சென்று பஸ்சுடன் மோதி காயமடைந்தனர் … அவர்களை குருநாகல் வைத்தியசாலையில் அனுமதித்த பொலிஸார் அவர்களின் உடமைகளை பரிசோதித்தபோது இருவரின் பயணப் பைகளிலிருந்தும் 350 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் சிக்கியது

ஞாயிற்றுக்கிழமை (06) மாலை தொரோவ்வ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த இருவரின் பயணப் பைகளிலிருந்து 350 கிராம் ‘ஐஸ்’ (கிரிஸ்டல் மெதம்பெட்டமைன்) போதைப்பொருளை கொட்டதெனியாவ பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரும் பின்னாலிருந்து பயணித்தவரும் பலத்த காயமடைந்துள்ளனர்.
அவர்கள் முதலில் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பொலிஸ் பாதுகாப்பின் கீழ் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளின் போது, கொட்டதெனியாவ பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் விபத்துக்குள்ளானவர்களின் உடமைகளை பரிசோதித்தபோதே இந்தப் போதைப்பொருளைக் கண்டுபிடித்துள்ளனர்.
21 மற்றும் 25 வயதுடைய சந்தேகநபர்கள் கிராண்ட்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



