பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தோட்டா, சிறுவனின் தலையைத் துளைத்து மூளையையும் துளைத்துச் சென்றமையால் தான் மரணம் ஏற்பட்டது என பிரேத பரிசோதனை ரிப்போட் வெளியானது

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து உயிரிழந்த சிறுவனின் உடற்கூற்றுப் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில், துப்பாக்கிச் சன்னம் தலையைத் துளைத்துச் சென்றமையே மரணத்திற்கு நேரடி காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை (10), யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில், வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயஸ் (17 வயது) என்ற சிறுவன் உயிரிழந்தார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று சட்ட வைத்திய அதிகாரி எம். மயூரதன் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை நடைபெற்றது.
அதன் முடிவில் துப்பாக்கிச் சன்னமானது இளைஞனின் நெற்றியில் பாய்ந்து, தலைக்குள் ஊடுருவியுள்ளது.
அவ்வாறு ஊடுருவிய சன்னம் மூளையைத் துளைத்துச் சென்றமையால் ஏற்பட்ட பாரிய பாதிப்பினால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



