சொத்துக்கள், செலவுகள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்த விபரங்கள் அடங்கிய சத்தியக்கடதாசியை ஏப்ரல் 10 க்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு மகிந்த ராஜபக்ஷவுக்கு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது சொத்துக்கள், செலவுகள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்த விபரங்கள் அடங்கிய சத்தியக்கடதாசியை ஏப்ரல் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC), முன்னெடுத்து வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தனது சொத்துக்கள், பொறுப்புகள், செலவுகள் மற்றும் வருமான ஆதாரங்களை உள்ளடக்கிய விரிவான வெளிப்படுத்தலை வழங்குமாறு அந்த அறிவித்தலில் ராஜபக்ஷவிடம் கோரப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைக்கு இணங்கத் தவறினால், சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின் கீழ் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த அறிவித்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் இருந்து இதுவரை உடனடி பதில் எதுவும் வழங்கப்படவில்லை.

