வாழ்நாள் முழுவதும் தங்களுக்கு உணவளித்துப் பராமரித்த எஜமானின் இறுதி ஊர்வலத்தில், அவரது பூதவுடலை காளைகளே சுமந்து சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் மன்னாரில் பதிவு

வாழ்நாள் முழுவதும் தங்களுக்கு உணவளித்துப் பராமரித்த எஜமானின் இறுதி ஊர்வலத்தில், அவரது பூதவுடலை காளைகளே சுமந்து சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் மன்னார் – நறுவிலிக்குளத்தில் இடம்பெற்றுள்ளது.
மன்னார், நறுவிலிக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அண்மையில் இயற்கை எய்தினார். அவர் உயிருடன் இருந்தபோது, “நான் இறந்த பின்பு, எனது உடலை நான் வளர்த்த காளைகள் பூட்டிய மாட்டு வண்டியிலேயே சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என்று தனது இறுதி விருப்பத்தை உறவினர்களிடம் தெரிவித்திருந்தார்.
அவரது மறைவைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தின் போது அவரது விருப்பப்படியே காளைகள் பூட்டிய வண்டியில் பூதவுடல் வைக்கப்பட்டது.
தனது எஜமானைப் பிரிந்த துயரம் அந்தக் காளைகளின் முகத்திலும் சோகமாகப் பிரதிபலித்தது.
இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட கிராம மக்கள், எஜமானின் விசுவாசமிக்க அந்தக் காளைகளின் செயலைக் கண்டு கண்கலங்கினர்.
விலங்குகள் வெறும் உயிரினங்கள் மட்டுமல்ல, அவை உணர்வுகளைப் பகிரும் உற்ற நண்பர்கள் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.


