News

டிக்கோயாவில் இடம்பெற்ற கொடூர இரட்டைக் கொலை சம்பவத்தை அடுத்து அதிரடியாக செயல்பட்ட பொலிஸ்  அதிகாரிகளின் அர்ப்பணிப்பு, கடமை உணர்வுகளை கெளரவித்து கேக் வெட்டி பாராட்டு விழா

நுவரெலியா மாவட்டம், ஹட்டன் – டிக்கோயா பகுதியில் கடந்த மே 21-ஆம் திகதி அரங்கேறிய கொடூர இரட்டைக் கொலை சம்பவத்தில், மிகக் குறுகிய காலப்பகுதியில் சந்தேக நபரைக் கைது செய்து, வழக்கு ஆதாரங்களை மீட்டெடுத்த பொலிஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (மே 26) அன்று கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கை காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில், இந்த அதிகாரிகளின் அர்ப்பணிப்பு, கடமை உணர்வு மற்றும் தனித்துவமான திறமைகளைப் பாராட்டும் விசேட நிகழ்வொன்று ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஹட்டன் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசூரிய, ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) சுகததாச உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு அதிகாரிகளைப் பாராட்டினர்.

கொலை வழக்கின் பின்னணி:

கடந்த மே 21-ஆம் திகதி டிக்கோயா பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் காலிமுத்து சக்திவேல் (85 வயது) மற்றும் அவரது மனைவியான சகுந்தலா தேவி (82 வயது) ஆகிய தம்பதியினர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். அத்துடன், அவர்களிடமிருந்து சுமார் 18 பவுன் தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டிருந்தன. இச்சம்பவம் மலையகப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

துரித விசாரணை மற்றும் கைது:

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முடுக்கிவிட்ட ஹட்டன் பொலிஸார், பொதுமக்களிடமிருந்து கிடைத்த ரகசியத் தகவல்கள் மற்றும் சிசிடிவி (CCTV) காட்சிகளின் ஆதாரங்களின் அடிப்படையில், கடந்த மே 23-ஆம் திகதி பொகவந்தலாவை பகுதியில் வைத்து சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.

பதுளை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பிரதான சந்தேகநபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து தம்பதியினரின் உடல்கள் , கடந்த மே 24-ஆம் திகதி தகனம் செய்யப்பட்ட நிலையில், மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பிரதான சந்தேகநபர் வரும் ஜூன் மாதம் 2-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இத்தகைய சவாலானதொரு கொள்ளை மற்றும் கொலை வழக்கை, நவீன புலனாய்வு உத்திகளைக் கையாண்டு 48 மணித்தியாலங்களுக்குள் வெற்றிகரமாகக் கையாண்ட விசாரணை அதிகாரிகளின் துரித செயல்பாட்டினைப் பாராட்டியே இந்த கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button