அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய எடுத்த முடிவு குறித்து நான் கவலையடைகிறேன் ; டட்லி சிறிசேன

அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய எடுத்த முடிவு குறித்து தான் கவலையடைவதாக பிரபல தொழிலதிபர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானத்தின் காரணமாக, ஒரு கிலோ நெல்லுக்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும் உறுதிப்படுத்தப்பட்ட விலை குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
“நெல்லுக்கு அரசாங்கம் ஒரு உறுதிப்படுத்தப்பட்ட விலையை நிர்ணயித்துள்ளது. உண்மை நிலைவரப்படி, நாட்டரிசிக்கு 120 ரூபாயும், சம்பா அரிசிக்கு 125 ரூபாயும், கீரி சம்பாவுக்கு 130 ரூபாயும் வழங்கப்படுகிறது.
இந்த விலைகளை நிர்ணயிக்கும் போது ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நாட்டரிசியை விட சம்பா நெல்லின் எடையும் அறுவடை விளைச்சலும் இயல்பாகவே குறைவு. அதேபோல், சம்பாவை விட கீரி சம்பாவின் எடையும் விளைச்சலும் இன்னும் குறைவு.
இதன் காரணமாக, தங்களுக்கு வழங்கப்படும் விலை போதுமானதாக இல்லாததால் விவசாயிகள் கீரி சம்பா மற்றும் சம்பா பயிர்ச்செய்கையை கைவிட்டு, நாடு அரிசியை மட்டுமே தொடர்ச்சியாக பயிரிடுகின்றனர்.
இதனால் சந்தையில் சமநிலைத்தன்மை இல்லாமல் போய், நாடு அரிசியின் வரத்து அதிகரித்து அதன் விலை முற்றிலுமாக வீழ்ச்சியடைகிறது. மறுபுறம், ஏனைய அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
நாங்கள் வியாபாரம் மட்டுமே செய்கிறோம். இருப்பதைக் கொள்வனவு செய்து, அரிசியாக்கி வழங்குகிறோம். சந்தையை அல்லது விலைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அது ஆட்சியாளர்களால் தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை.
இந்த நிலை நீடித்தால், எதிர்காலத்தில் விவசாயிகள் தங்களது நெல்லை விற்க முடியாமல் போகும் நிலை ஏற்படும். தற்போது நமது நாட்டிற்கு 157,000 தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சில விவசாயிகள் இந்த விலை வீழ்ச்சிக்கு எம்மீது குற்றம் சுமத்துவதனை நான் கண்டேன்.
ஆனால், உண்மையில் இன்று நாட்டிற்கு அரிசி இறக்குமதி செய்யும் பிரச்சினை மட்டும் இல்லாவிட்டால், விவசாயிகளுக்கு இந்த விலைப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது. அவர்கள் உறுதியாக ஒரு கிலோ நெல்லை 125 அல்லது 130 ரூபாய்க்கு விற்றிருக்க முடியும். ஆனால் தற்போது அது 90, 100 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். எனக்கும் இதைத்தான் கூற வேண்டியுள்ளது.”



