ஒப்பந்தம் கையெழுத்தாகி சில மணி நேரங்களில் 12.5 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் ஹோர்முஸ் சந்தி ஊடாக கடந்தன.. ஆனால் லெபனானில், இஸ்ரேலியப் படைகள் இன்றும் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதித்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ஈரானுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட சில மணி நேரங்களிலேயே 12.5 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் ஹோர்முஸ் சந்தி ஊடாக கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் வௌ்ளை மாளிகையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இதனை குறிப்பிட்டார்.
முன்னதாக 6 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை தாங்கிய சவூதி அரேபியக் கொடியுடன் கூடிய மூன்று கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை ஊடாக கடந்ததாக தகவல்கள் வௌியாகியிருந்தன.
இந்த சூழலில் ஜே.டி வான்ஸ் இந்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் போரினால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ள லெபனானில், இஸ்ரேலியப் படைகள் இன்றும் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இந்த தாக்குதல்கள் காரணமாக, தற்போது எட்டப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அபாய நிலை காணப்படுகின்றது.
குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஹோர்முஸ் நீரிணையைஉடனடியாகத் திறப்பதற்கும், ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை நீக்குவதற்கும் அழைப்பு விடுக்கிறது.
பாதுகாப்பான பாதையை உறுதி செய்வதற்கும், கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும் இன்னும் அவகாசம் தேவைப்படுவதால்,நீரிணை வழியேயான போக்குவரத்து போருக்கு முந்தைய நிலையை அடைய இன்னும் காலம் எடுக்கும் என்று கப்பல் நிறுவனங்கள் கூறினாலும், அதன் தாக்கம் உடனடியாகத் தெரியத் தொடங்கியுள்ளது.



