முன்னையவர்கள் கோடிக்கணக்கான கடனில் அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்தனர்.. நாங்கள் மக்களின் நியாயமான வரிப் பணத்தில் அமைக்கிறோம்..

முன்னைய அரசாங்கங்கள் கோடிக்கணக்கான வெளிநாட்டு கடன்களைப் பெற்று அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்தன; ஆனால் தற்போதைய அரசாங்கம் பொதுமக்களிடமிருந்து நியாயமான முறையில் அறவிடப்படும் வரிப் பணத்தைக் கொண்டு நாட்டிற்குத் தேவையான சாலைக் கட்டமைப்பை அபிவிருத்தி செய்து வருகிறது என்று வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பி. சரத் தெரிவித்தார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், கடந்த ஆட்சிக் காலங்களில் பெரும் வர்த்தகர்களிடமிருந்து முறையாக வரி அறவிடப்படாமை காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்ததாக வலியுறுத்தினார்.
குறிப்பாக, தயா கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அலோசியஸ் போன்ற வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய கோடிக்கணக்கான ரூபா வரிப் பணத்தை அறவிடுவதற்கான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“அன்றைய ஆட்சியாளர்கள் தங்களுக்கு நெருக்கமான வர்த்தகர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கி நாட்டை கடன் வலையில் சிக்க வைத்தனர். ஆனால் இன்று நாம் அந்தத் தவிர்க்கப்பட்ட வரிப் பணத்தை அரசாங்கத்திற்கு முறையாக அறவிட்டு, அந்தப் பணத்தை பொதுமக்களின் நலனுக்காகப் பயன்படுத்துகிறோம். ரம்புக்கனையிலிருந்து குருநாகல் வரையிலும், கொழும்பிலிருந்து மீரிகம வரையிலும் அதிவேக நெடுஞ்சாலைகளின் பணிகளை உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தியே நாங்கள் ஆரம்பித்தோம்,” என்று அமைச்சர் மேலும் கூறினார்.
2029 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பை தம்புள்ளை வரை நீட்டிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் வெளிநாட்டுக் கடன்களைப் பெறாமல் உள்நாட்டு வலிமையைக் கொண்டு நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் டீ.பி. சரத் இதன்போது வலியுறுத்தினார்.



