அரிசி விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.. நாம் ஆட்சிக்கு வரும்போது ஒரு கிலோ அரிசி 270-280 ஆக இருந்தது… இப்போது 220-230 ஆக குறைந்துள்ளது…

ஒரு கிலோ நெல்லை அரிசியாக மாற்றுவதற்குத் தேவையான சராசரி செலவு 17 ரூபாய் என்ற குறைந்த மட்டத்தில் காணப்படுவதாகவும், அதற்கமைய விவசாயி மற்றும் நுகர்வோர் இருவருக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ரீதியான கணக்கீடுகளின் அடிப்படையில் இந்த செலவு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நெல் அறுவடை செய்வது முதல், அதனை அரிசியாக மாற்றி சந்தைக்கு விநியோகிப்பது வரையிலான அனைத்து செலவுகளும் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. “நெல் மூட்டையைத் தூக்கும் தொழிலாளியின் கூலி, லொறியில் ஏற்றுதல், ஓட்டுநர் மற்றும் உதவியாளரின் சம்பளம், பயணத்தின் போது தேநீர் அருந்துவதற்கான செலவு மற்றும் லொறி டயர்கள் தேய்மானம் அடைவது வரையிலான அனைத்து காரணிகளும் அறிவியல் ரீதியாகக் கணக்கிடப்பட்டுள்ளன” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையிடமுள்ள நெல் இருப்பை அரிசியாக மாற்றுவதற்காக நாட்டின் 11 சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஊடாக ஒரு கிலோ நெல்லை அரிசியாக்குவதற்கு 12 ரூபாய் முதல் 22 ரூபாய் வரையிலான விலைகளின் கீழ் டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி, அரிசி உற்பத்திக்கான சராசரி செலவு 17-18 ரூபாய்க்கு இடைப்பட்ட மட்டத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் யல பருவ அறுவடை தற்போது அம்பாறை, அம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் போன்ற பகுதிகளில் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அரசாங்கம் தலையிட்டு உத்திரவாத விலையின் கீழ் நெல் கொள்வனவை ஆரம்பித்துள்ளதாகவும் கூறினார்.
அதன்படி, ஒரு கிலோ நாடு நெல் 120 ரூபாய், ஒரு கிலோ சம்பா நெல் 130 ரூபாய் மற்றும் ஒரு கிலோ கீரி சம்பா நெல் 140 ரூபாய் என்ற விலைகளின் கீழ் நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் 16,000 மில்லியன் (16 பில்லியன்) ரூபாயை ஒதுக்கியுள்ளது.
கடந்த காலத்தில் 270-280 ரூபாய் வரை உயர்ந்திருந்த அரிசி விலையைக் கட்டுப்படுத்தி, நுகர்வோருக்கு 220, 230, 240 மற்றும் 260 ரூபாய் போன்ற நியாயமான விலைகளில் அரிசி வகைகளைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான பின்னணியை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் வலியுறுத்தினார்.



