‘நாங்களும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பமாகத்தான் வாழ்ந்தோம்… ஒரு வீடு கூட இருக்கவில்லை..’ – அமைச்சர் சமந்த

தானும் கடந்த காலத்தில் மிகவும் கடினமான சூழ்நிலையிலேயே வளர்ந்ததாகவும், தனது குடும்பத்திற்கு முறையான வீடு கூட இருக்கவில்லை என்றும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு தனது கடந்த காலம் குறித்த உருக்கமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அமைச்சர், தனது தாய் 7,500 ரூபா வீட்டுக்கடனைப் பெற்று வீடு கட்டுவதற்கு எடுத்த முயற்சி குறித்து விவரித்தார்.
பாடசாலை செல்லும் வயதில் இருந்த தானும் ஏனைய பிள்ளைகளும், தாயாருடன் இணைந்து மலையிலிருந்து கற்களை உருட்டி வந்து, செங்கற்களை அறுத்து, ஆற்றிலிருந்து மணலை அள்ளி அந்த வீட்டைக் கட்டிய விதத்தை அவர் நினைவுகூர்ந்தார்.
அந்தக் கடனை அடைப்பதற்காகப் பல வருடங்களாகக் கடுமையாக உழைக்க வேண்டியிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த அனுபவங்களின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கத்தின் நோக்கங்களை விளக்கிய அமைச்சர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற இலக்கை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக வலியுறுத்தினார்.
நாட்டில் நிலவும் வீண்விரையம் மற்றும் ஊழலை நிறுத்தி, அரசியல்வாதிகள் அனுபவிக்கும் தேவையற்ற சொகுசுகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே தமது அரசாங்கத்தின் முதன்மையான கடமையாகும் என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.



