கருத்து வெளியிடும் கட்சி பொதுச்செயலாளரை உடனடியாக கைது செய்யும் அரசாங்கம், துப்பாக்கிச் சூடு நடத்தும் குற்றவாளிகளை கைது செய்ய அசமந்த போக்கு காட்டுகிறது ; நாமல்

அரசாங்கம் பொலிஸாரை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவது தெளிவாக அம்பலமாகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமது கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சி ஒன்றின் பொதுச்செயலாளர் ஒரு கருத்தை வெளியிட்டவுடன் அவரை உடனடியாக இந்த அரசாங்கம் விசாரணைக்கு அழைத்தது.
ஆனால் நாட்டில் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அவை தொடர்பான விசாரணைகளை நடத்தவோ குற்றவாளிகளை கைது செய்யவோ அரசாங்கம் இந்த அளவிற்கு தீவிரம் காட்டவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
இதேவேளை நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து செல்வதுடன் அவை நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு பிரச்சினையாக உருவாகியுள்ளது.
எனினும் பொலிஸாரோ அல்லது பொலிஸ் மா அதிபரோ இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.



