போதைப்பொருட்கள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, இரண்டு வாள்கள் மற்றும் ஒரு ஈட்டி கத்தி ஆகியவற்றுடன் இளைஞன் ஒருவன் திகன பிரதேசத்தில் தெல்தெனிய பொலிஸாரால் கைது

திகன பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் ஒருவர் போதைப்பொருட்கள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் தெல்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திகன பகுதியில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாரிகள் 5,155 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 63,000 ரூபாவையும் மீட்டுள்ளனர். சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து, சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்ட புலனாய்வாளர்கள், வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, மேலும் 1,250 மில்லிகிராம் ஐஸ், இரண்டு வாள்கள் மற்றும் ஒரு ஈட்டி கத்தி ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.
தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


