ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி: வடமேல் மாகாணத்திற்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி: வடமேல் மாகாணத்திற்கு வழங்கப்பட வேண்டும்!
✍🏻 M.S. Ahamed
தேசியப்பட்டியல் நியமனத்தில் கிழக்குக்கு வெளியே வாழும் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டும்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் காலியாகும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, கட்சியின் உயர்பீட உறுப்பினரும் வட மேல் மாகாண சபையின் நீண்டகால முன்னாள் உறுப்பினருமான சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதே இலங்கை முழுவதிலும் உள்ள ஆதரவாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பாகும்.
கிழக்குக்கு வெளியே தொடரும் ஏமாற்றங்கள்:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, கிழக்கு மாகாணத்திற்கு வெளியே உள்ள முஸ்லிம் சமூகத்திற்கு பல தடவைகள் தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் குறித்து வாக்குறுதி அளித்த போதிலும், அவை நிறைவேற்றப்படவில்லை என்ற கவலை கட்சி ஆதரவாளர்களிடையே நீண்டகாலமாக உள்ளது.
குறிப்பாக, கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் வடமத்திய மாகாண சபை உறுப்பினரும், கொள்கை பரப்புச் செயலாளருமான ராவுத்தர் நெய்னார் முகம்மது போன்ற தியாகம் மிக்க மூத்த தலைவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய இந்த வாய்ப்பு கைநழுவிப் போனது வரலாறு.
குருநாகல் மற்றும் அனுராதபுர மாவட்ட மக்களின் குரல்:
இம்முறையாவது கிழக்கு மாகாணத்திற்கு வெளியே உள்ள முஸ்லிம் காங்கிரஸ் வாக்காளர்களின் தியாகங்களையும் பங்களிப்பையும் கௌரவிக்கும் வகையில் கட்சித் தலைமை தீர்மானம் எடுக்க வேண்டும்.
குருநாகல் மாவட்டம் மற்றும் அனுராதபுர மாவட்டம் உட்பட வடமேல் மற்றும் வடமத்திய மாகாண முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அனைவரினதும் ஒருமித்த விருப்பம் — சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களுக்கு இந்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும் என்பதே!
கட்சியின் வளர்ச்சிக்கும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களின் நியமனம், கிழக்குக்கு வெளியே உள்ள ஆதரவாளர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை தோற்றுவிக்கும்.
தலைமைத்துவம் இந்த நியாயமான கோரிக்கைக்கு மதிப்பளித்து தகுந்த முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்!



