கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரித்ததால், ஏற்கனவே வாழ்க்கைச் செலவால் தவிக்கும் குடும்பங்கள் கூடுதல் சுமையை எதிர்நோக்கும் ; சஜித்

ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராமவில் நடைபெற்ற விவசாயிகள் சந்திப்பில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கோதுமை மா விலையேற்றமானது உணவுச் செலவை மேலும் அதிகரித்து, ஏற்கனவே வாழ்க்கைச் செலவால் தவிக்கும் குடும்பங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.
கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 17 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதால் ரொட்டி, பாண் பொருட்கள் மற்றும் மா சார்ந்த ஏனைய உணவுகளின் விலைகள் அதிகரிக்கும் என பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
குறைந்தபட்ச ஊதியம் தொடர்பான சர்வதேச ஒப்பீட்டில் 130 நாடுகளில் இலங்கை 120வது இடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் தற்போதைய ஊதியம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்ய போதுமானதாக இல்லை என வாதிட்டார்.
மேலும், அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவின் அளவை அளவிடுவதற்கு வாய்ப்பாக மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துமாறு அவர் அரசாங்கத்திற்கு சவால் விடுத்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த முனையும் முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்பு திருத்தம் குறித்து கருத்து தெரிவித்த பிரேமதாச, நீதித்துறையின் சுயாதீனத்தை சீர்குலைக்கவும் ஜனநாயக நிறுவனங்களில் தலையிடவும் அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி ஒரு நபர் மாதம் ஒன்றுக்கு 17,315 ரூபாயில் வாழ முடியுமா எனக் கேள்வி எழுப்பிய அவர், உத்தியோகபூர்வ வாழ்க்கைத்தர அளவீடுகளையும் விமர்சித்தார்.
வறுமை, வேலைவாய்ப்பு, விவசாயம், சுகாதாரம் மற்றும் முதலீடு ஆகிய துறைகள் குறித்து கவலை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர், பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
நாட்டின் மக்கள் தொகையில் 30% முதல் 40% வரையானோர் வறுமையில் வாழ்வதாகத் தெரிவித்த பிரேமதாச, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த தெளிவான வேலைத்திட்டம் அவசியமென வலியுறுத்தினார்.
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான வலுவான கொள்கைகள் மற்றும் இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான தேசிய மூலோபாயம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.



