
மடவளை நுகதெணிய பிரதேசத்தில் 639 – பிஹில்லதெணிய கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் விவசாய நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வயலோரப் பாதையின் அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்து, இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 290 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்ட இப்பாதை கான்கிரீட் இட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன், இதற்காக சுமார் ரூபா 1. 4 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் இயங்கும் பிரஜாசக்தி அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டிலும் பங்களிப்பிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரதேச மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு, அவர்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் சமூகத்தின் பங்களிப்புடன் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், பாதையை கான்கிரீட் செய்வதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை நிலத் தயார்படுத்தல் பணிகளுக்காக பேக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்துவதற்கான செலவை பாததும்பர பிரதேச சபை உறுப்பினர் திரு. ரினூஸ் பாரூக் தனது தனிப்பட்ட நிதியில் இருந்து வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பாதை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்வில் பாததும்பர பிரதேச சபைத் தலைவர் திரு. நிமல் ஹேரத், பிரதேச சபை உறுப்பினர்களான திரு. ரினூஸ் பாரூக் மற்றும் திரு. தீக்ஷன அம்பகஸ்பிடிய, பாததும்பர பிரதேச செயலாளர் திருமமது சேரசிங்க, பிரஜாசக்தி அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



