அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்காவையும் உடனடியாகக் கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் இன்று பிடியாணை பிறப்பிப்பு

முன்னாள் மூத்த கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியான பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக ஆகிய இருவரையும் உடனடியாகக் கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் பசான் அமரசேன இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கபில சந்திரசேனவின் மனைவி சார்பில் பிணைப் பிணையாளர்களாக முன்னின்ற அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகாமையினாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் விளக்கமளிக்கையில், அரவிந்த டி சில்வாவின் தாயார் காலமாகிவிட்டதாகவும், அவரது இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளமையினாலேயே அவர்களால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போனதாகவும் தெரிவித்தார்.
எனினும், குறித்த பிடியாணையினை திரும்பப் பெறுவதற்காக ஆஜராகும்போது இக்கருத்துக்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிவான் மேலும் அறிவித்தார்.



