அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 Sea Ranger ஹெலிகாப்டர்கள் நாட்டை வந்தடைந்தன

அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு (SLAF) நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து (10) TH-57 ‘சீ ரேஞ்சர்’ (Sea Ranger) பல்துறை ஹெலிகாப்டர்கள் கடல்வழியாக இலங்கையை வந்தடைந்துள்ளன.
விமானப்படையின் கூற்றுப்படி, இந்த விமானங்களின் வருகையானது இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், இலங்கை விமானப்படையின் செயல்பாட்டு மற்றும் பயிற்சித் திறன்களை மேம்படுத்துவதில் ஒரு மதிப்புமிக்க பங்களிப்பாகவும் விளங்குகிறது.
இந்த ஹெலிகாப்டர்கள் தற்போது இரத்மலானை விமானப்படை தளத்தில் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆயத்தப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.
தேவையான ஆய்வுகள், ஏற்பு நடைமுறைகள் மற்றும் சோதனைப் பறப்புகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த விமானங்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டு செயல்பாட்டுக் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்படும்.
TH-57 ரக ஹெலிகாப்டர்கள் இலங்கை விமானப்படையின் விமானப் பயிற்சித் திறனை கணிசமாக வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதுடன், பரந்த அளவிலான தேசியத் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் திறனையும் மேம்படுத்தும்.
இவ்விமானங்கள் முதன்மையாக விமானி பயிற்சி, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்பு (HADR) செயல்பாடுகள், தேடல் மற்றும் மீட்பு (SAR) பணிகள் மற்றும் இலங்கை விமானப்படையினால் மேற்கொள்ளப்படும் ஏனைய பொதுச்சேவைக் கடமைகளுக்காகப் பயன்படுத்தப்படும்.



