News

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) இரண்டு தவணை நிதிகள் ஒன்றாகக் கிடைத்த போதிலும்,  இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்திப்பது ஏன் என்ற விளக்கம் வெளியானது

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) இரண்டு தவணை நிதிகள் ஒன்றாகக் கிடைத்த போதிலும், சந்தையில் இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்திப்பதற்கான பிரதான காரணங்கள் குறித்து பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெளிவுபடுத்தியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியின் ஊடாகவே அவர் இந்த தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளார்.

அந்நியச் செலாவணி மாற்று வீதத்தை ரூபாய்க்கும் டொலருக்குமான ‘தேவையும் விநியோகமுமே’ (Demand and Supply) தீர்மானிக்கின்றன என்று சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய சூழலில் எமது சந்தையிலிருந்து அதிகப்படியான டொலர்கள் வெளியேறுவதற்கு ‘எரிபொருள் நுகர்வு அதிகரித்துள்ளதே முதன்மைக் காரணி என்றார்.

சாதாரணமாக ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த எரிபொருள் செலவினம், தற்போது 700 முதல் 800 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

IMF மூலம் 695 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்து கையிருப்பு உயர்ந்தாலும், நாட்டின் எதிர்காலக் கடன் மறுசெலுத்துகை மற்றும் சந்தை நம்பிக்கையைப் பேணுவதற்காக மத்திய வங்கியால் அளவுக்கு அதிகமாக டொலர்களைச் சந்தைக்குள் விநியோகிக்க முடியாது.

ரூபாய் மேலும் மதிப்பிழக்கும் என்ற எதிர்பார்ப்பால், ஏற்றுமதியாளர்கள் தங்களிடமுள்ள டொலர்களை உடனடியாக ரூபாயாக மாற்றுவதைத் தாமதப்படுத்துகின்றனர். இது சந்தையில் டொலர் தட்டுப்பாட்டை மேலும் தீவிரமாக்குகிறது.

“மத்திய வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்து கடந்த வாரம் தற்காலிகமாக ரூபாயின் மதிப்பை உயர்த்தியிருந்தாலும், அதனை அடிக்கடி செய்ய முடியாது. டொலருக்கான உலகளாவிய அழுத்தமும், எரிபொருள் தேவையும் குறையாதவரை ரூபாயின் இந்த ஏற்ற இறக்கங்களைத் தவிர்க்க முடியாது.பொருளாதாரம் இவ்வாறு அடிக்கடி ஏறி இறங்குவது நல்லதல்ல.” என அவர் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்த அதன் விலையைச் சந்தை விலைக்கு ஏற்ப மாற்றி அமைப்பதே பிரதான வழியாகும். இது மக்களுக்கு சுமையாக இருந்தாலும், நுகர்வைக் குறைக்காமல் இந்த நெருக்கடியை முகாமை செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டார். நிலக்கரிப் பிரச்சினை மற்றும் நாம் செலுத்திய கூடுதல் பிரீமியம் போன்ற நஷ்டங்களை மக்கள் மீது சுமத்துவது நியாயமற்றது என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, வெளிநாட்டுக் கல்விக்கான கட்டணங்களைச் செலுத்துவதில் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் இந்த உலகளாவிய நெருக்கடி நீடிக்கும் வரை தொடர வாய்ப்புள்ளது.

இதற்குத் தீர்வாக, அரசாங்கம் எரிபொருள் விலையைச் சமநிலைப்படுத்துவதோடு, ஏழை மக்களுக்கு ‘அஸ்வெசும’ (Aswesuma) போன்ற நலத்திட்டங்கள் ஊடாக நிவாரணங்களை வழங்கி, மக்களின் வாழ்வாதாரப் பாதிப்பைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button