விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவின் : சிறைத் தண்டனை உறுதி செய்யபட்டது தொடர்பான தகவல்கள்

முறையற்ற விதத்தில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டமை தொடர்பான வழக்கில், சசி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகையை உறுதி செய்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன தீர்ப்பளித்துள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பில் தலையிடுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் தண்டனையையும் முழுமையாக உறுதி செய்தார்.
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு கடவுச்சீட்டொன்றைப் பெற்றுக் கொண்டமை தொடர்பாக 2022-ஆம் ஆண்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் சசி வீரவன்ச குற்றவாளியாகக் காணப்பட்டார். குறித்த வழக்கில் அவருக்கு இரண்டு வருட சிறைத் தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்தத் தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி, சசி வீரவன்ச கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். எனினும், குறித்த மேன்முறையீட்டை நிராகரித்த மேல் நீதிமன்றம், நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை அப்படியே (விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகையை உறுதி செய்து) உத்தரவிட்டது.



