நான்கு தசாப்தங்களுக்கு முன் தீகவாபி புனித பூமியாக அறிவிக்கப்பட்டதன் விளைவாக காணிகளை இழந்துள்ள 200 விவசாயிகளுக்கு பதில் காணி விடுவிப்பதற்கு ஏற்பாடு என்ற சுற்றாடல் அமைச்சரின் நடவடிக்கைக்கு ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் பெரும் வரவேற்பு

நான்கு தசாப்தங்களுக்கு முன் தீகவாபி புனித பூமியாக அறிவிக்கப்பட்டதன் விளைவாக காணிகளை இழந்துள்ள 200 விவசாயிகளுக்கு பதில் காணியாக வழங்கவென பால்கேணி வட்டையில் முதற்கட்டமாக 38 ஏக்கர் காணியினை விடுவிப்பதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற சுற்றாடல் அமைச்சர் பேராசிரியர் தம்மிக்க பட்டபெந்தியின் கருத்தை ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் பெரிதும் வரவேற்றுள்ளது.
இது பற்றி ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தலைவர் மு. முஸ்னத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கையில்,
அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக்கூட்டம் 10ஆம் திகதி நடைபெற்ற போதே அமைச்சர் இந்த உத்தரவாதத்தை அறிவித்துள்ளார்.
‘அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்திருந்த பொன்னன்வெளிக் கண்டம் 1982 ஆம் ஆண்டில் தீகவாபி புனித பூமியாக அறிவிக்கப்பட்டது. அதனால் 200 முஸ்லிம் விவசாயிகள் தமது காணிகளை இழந்தனர்.
இவ்வாறு காணிகளை இழந்தோருக்கு பதில் காணிகளை வழங்க அப்போது அமைச்சராக இருந்த அஷ்ரப் பெரு முயற்சி எடுத்தார். இதற்கான அனுமதியும் அரசால் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் தவளை தன் வாயால் கெட்டது போல் இந்த காணி வழங்கல் பற்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் கொழும்பிலும் அம்பாரை மாவட்டத்தில் பெரிய போஸ்டர்கள் ஒட்டி தமது வெற்றியாக காட்டினர்.
இதை சிங்கள இனவாதிகள் தவறாக புரிந்து பதில் காணிகள் வழங்க வேண்டாம் என ஆர்ப்பாட்டம் செய்ததால் அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க இந்த காணி வழங்களை நிறுத்தினார்.
அஷ்ரபுக்கு பின் முஸ்லிம் காங்கிரஸ் பல தடவைகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் காணியை இழந்த மக்களுக்கு பதில் காணி வழங்க சரியான முயற்சி எடுக்கவே இல்லை.
இந்த நிலையில் மேற்படி காணிகளை இழந்தோருக்கு முதல் கட்டமாக 37 ஏக்கர் காணிகளை விடுவிக்கவிருப்பதாக அரசு தெரிவித்துள்ளமை இந்த அரசின் மீது நல்லெண்ணத்தை அதிகரித்துள்ளது என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தெரிவித்துள்ளது.



