News

ஏற்கனவே பலர் ஏமாந்து வந்த நிலையில் … சீன காதலனின் 25 இலட்ச ரூபா பெறுமதியான பரிசுப்பொருட்களின் சுங்கத் தீர்வைக்கு 5 இலட்சம் ரூபா அனுப்பி பணத்தை தொலைத்த மற்றுமொரு இலங்கை பெண்

சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடும் பழக்கம் கொண்ட யுவதி ஒருவருக்கு, முகநூல் வழியாக சீனா இளைஞன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையிலான இந்த ஆன்லைன் நட்பு, குறுகிய காலத்திலேயே நெருக்கமான காதலாக மாறியது.

தன்னைக் காதலிப்பதாகக் கூறிய அந்த சீன இளைஞன், தான் விரைவில் இலங்கைக்கு வந்து திருமணம் செய்துகொள்ளப்போவதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டியுள்ளான். அதன்பின், தான் இலங்கைக்கு வரும்போது உனக்காக விலை உயர்ந்த பரிசுப் பொருட்களைக் கொண்டு வருவதாகவும், அதன் மதிப்பு சுமார் 25 இலட்சம் ரூபாய் எனவும் கூறி, அப்பொருட்களைப் பெட்டி ஒன்றில் அடைத்து, அதில் தனது பெயர் மற்றும் யுவதியின் முகவரியை எழுதி வைத்திருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் அனுப்பியுள்ளார் . இதனை முழுமையாக நம்பிய அந்த யுவதி, அவர் மீது மிகுந்த அன்பும் நம்பிக்கையும் கொண்டுள்ளாள். அந்த சீன இளைஞன் தான் இலங்கைக்கு வருவதற்கான விசா மற்றும் விமான டிக்கெட் நகல்களையும் அவளுக்கு அனுப்பி, தான் வருவதை உறுதிப்படுத்தியுள்ளான்.

திடீரென்று அந்த இளைஞன், “நான் கொண்டு வரும் பரிசுப் பொருட்கள் அடங்கிய பெட்டியை விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ள, சுங்கத் தீர்வை (Customs duty) கட்டணமாக இலங்கை ரூபாயில் 5 இலட்சம் தேவைப்படுகிறது. என்னால் சீனாவிலிருந்து இதைச் செலுத்த முடியாது, எனவே நான் அனுப்பும் வங்கிக் கணக்கிற்கு இந்தப் பணத்தை அனுப்பு” என்று கேட்டுள்ளான்.

பரிசுப் பொருட்களின் மதிப்பு 25 இலட்சம் என்பதால், 5 இலட்சம் செலுத்துவதில் தவறில்லை என நினைத்த அந்த யுவதியும், அவளது பெற்றோரும், அந்தப் பணத்தைக் கொடுத்தால் அவர் வந்தவுடன் அமெரிக்க டாலர்களாகப் பெற்றுக்கொள்ளலாம் என்ற பேராசையில், தன்னிடம் இருந்த பணத்தையும், நகைகளை அடகு வைத்தும் அந்த வங்கிக் கணக்கிற்கு 5 இலட்சம் ரூபாயை அனுப்பியுள்ளனர்.

பணத்தை அனுப்பியதிலிருந்து அந்தச் சீன இளைஞனின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டிருப்பதுடன், அவனது தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த யுவதிக்கும், அவளது பெற்றோருக்கும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது அவர்கள் பெரும் மன உளைச்சலில் ஆழ்ந்துள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

எச்சரிக்கை: சமூக வலைதளங்களில் தெரியாத நபர்களிடம் பழகும்போது மிகவும் கவனமாக இருங்கள். குறிப்பாக, வெளிநாட்டிலிருந்து பரிசுப் பொருட்கள் அல்லது பணம் அனுப்புவதாகக் கூறி, சுங்கக் கட்டணம் அல்லது வேறு காரணங்களுக்காகப் பணம் கேட்கும் நபர்களிடம் எந்தக் காரணத்திற்காகவும் பணத்தை வழங்காதீர்கள். இது போன்ற மோசடிகள் தற்போது அதிகரித்துள்ளன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button