“அரச ஊழியர்கள் திருடுகிறார்கள்… அப்பாவிகளான நாங்கள் திட்டு வாங்குகிறோம்… – லால்காந்த…”
தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை என்றாலும், அரச ஊழியர்கள் இன்னும் திருடிக்கொண்டே இருக்கிறார்கள் என்று விவசாய, காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே. டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
“எலைட் (பிரபுக்கள்) அல்லாத ஒரு வர்க்கத்தின் ஆட்சியாக நாங்கள் தொடர்ந்து ஆட்சியில் இருப்போம் என்ற உறுதியில் இருக்கிறோம். 2024 வரை எதுவும் இல்லை என்றுதான் ரணில் விக்ரமசிங்க கூறினார். பேன்ட்களின் வாரை (பெல்ட்) இறுக்கிக் கொள்ளுமாறு கூறினார். ஏன், உண்ண உணவும் குடிக்க நீரும் இல்லாதபோது வயிறு ஒட்டிப்போகுமே. பெல்ட்டை இறுக்கிக் கொள்ள வேண்டுமென்றால், உட்பக்கமாக இன்னும் இரண்டு மூன்று ஓட்டைகள் போட வேண்டியிருக்கும். ரணில் அப்படித்தான் ஓட்டை போட்டுக்கொள்ளச் சொன்னார்.
நாட்டை மீட்டெடுக்க வேண்டுமென்றால் 2048 வரை இருக்குமாறு கூறினார். நாங்கள் இப்போது அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளையும் ஆரம்பித்துள்ளோம். அரச ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகிறோம். இந்த யுத்தம் (நெருக்கடி) வந்த நேரத்திலும் சம்பளத்தைக் குறைக்கவோ, விவசாயிகளின் மானியங்களை நீக்கவோ எதையும் செய்யவில்லை, அனைத்தையும் முகாமைத்துவம் செய்து மிகச் சிறப்பாகக் கொண்டு செல்கிறோம். இப்போது நாட்டில் இருப்பது பணம் இல்லாத பிரச்சினை அல்ல. 100 ரூபாய் ஒதுக்கினால் 60 ரூபாய்க்குத்தான் வேலை நடக்கிறது. அரச சேவையில் இன்னும் திருடுகிறார்கள். அரசியலில் இல்லை. இன்னும் மக்கள் திட்டுகிறார்கள், எங்களைத்தான் திட்டுகிறார்கள். ‘என்ன, நீங்கள் இன்னும் இதை மாற்றவில்லையே’ என்று கேட்கிறார்கள்.”
தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் புதிய ஊழியர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்குவதற்காக அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் கே. டி. லால்காந்த இதனைத் தெரிவித்தார்.



