சம்மாந்துறையில் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியை வலுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது

சம்மாந்துறையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டமைப்பை வலுப்படுத்தவும் புதிய அமைப்பாளர்கள் நியமனம் குறித்தும் ஆலோசனை
நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை தொகுதிக்குட்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியின் புனரமைப்பு மற்றும் அமைப்புரீதியான செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கிலான முக்கிய கலந்துரையாடல், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஹாதிக் இப்றாஹிம் தலைமையில் சம்மாந்துறையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் போது, பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகள், கட்சியின் அமைப்புக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
மேலும், வட்டார அமைப்பாளர்கள், இளைஞர் அமைப்பாளர்கள், மாதர் அமைப்பாளர்கள் ஆகியோரின் நியமனங்கள் தொடர்பிலும், கட்சியின் அடிமட்ட செயற்பாடுகளை விரிவுபடுத்தும் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் வட்டார அமைப்பாளர்களாக நியமிக்கப்படவுள்ளோர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான சாத்தியமான வேட்பாளர்கள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டு தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
கட்சியின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தி, மக்கள் சேவையை மையமாகக் கொண்ட அரசியல் பணிகளை முன்னெடுப்பதற்கான உறுதிப்பாட்டுடன் கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
UMAR LEBBE NOORUL HUTHA UMAR
BBA (HRM), Dip.In. Journalism,



