நான் பாராளுமன்றத்திற்குப் பொருத்தமான ஆடையையே அணிந்து வந்துள்ளேன். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், வேண்டுமென்றால் ஆடையை கழற்றிக் காண்பிக்கவா? : அர்ச்சுனா

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி சபைக்கு அணிந்து வந்திருந்த ஆடை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டபோது ”ஆடையை கழற்றிக் காண்பிக்கவா”என அர்ச்சுனா எம்.பி. கேட்டபோது அவசரமாக அதனைத்தடுத்த சபாநாயகர் அந்தப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) யாழ் மாவட்ட எம்.பி.யான அர்ச்சுனா இராமநாதன் முதல் தடவையாக வெள்ளை வேட்டி ,வெள்ளை சட்டையுடன் வந்திருந்தார். இந்நிலையில் அவர் ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி எழும்பினார்.
இதன்போது எழுந்த அரச தரப்பின் வன்னிமாவட்ட எம்.பி.யான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ,அர்ச்சுனா எம்.பி;. அணிந்து வந்த ஆடை பாராளுமன்ற ஒழுங்கு முறைக்கு உட்பட்டதா என்றவாறாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அர்ச்சுனா எம்.பி., நான் அணிந்து வந்திருக்கும் ஆடை பாராளுமன்ற மரபுகளுக்கு உட்பட்டதுதான். நான் பாராளுமன்றத்திற்குப் பொருத்தமான ஆடையையே அணிந்து வந்துள்ளேன். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், வேண்டுமென்றால் ஆடையை கழற்றிக் காண்பிக்கவா?” என்று கேட்டார்
இதன்போது குறுக்கிட்ட சபாநாயகர், “ஆடை குறித்த விவாதம் தேவையில்லை, அது ஒரு பிரச்சினையல்ல” என்று தெரிவித்து, அர்ச்சுனா எம்.பி.யை தனது ஒழுங்குப் பிரச்சினையை எழுப்புமாறு கூறி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைத்தார்.



