News

இந்த நாட்டுக்கு முதுகெலும்புள்ள வலுவான தலைவரொருவர் அவசியம் என்பதால், எமது ஜனசெத பெரமுன கட்சியின் பௌத்த துறவி ஒருவரின் தலைமையிலான ஆட்சியே இந்த நாட்டுக்கு தேவையாகும்.

(க.சிவலிங்கமூர்த்தி)

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்ட போதிலும், அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் அடியாட்கள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் இன்னமும் தொடர்ந்து இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.



கொழும்பில் அமைந்துள்ள ஜனசெத பெரமுன கட்சியின் காரியாலயத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

கடந்த காலத்தில் ஸ்ரீ மகா போதி, தம்புள்ளை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகை போன்ற புனித தலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி ஏராளமான சிங்கள மக்களைக் கொன்றொழித்தனர்.

புனித தளம் வரை சென்று அவர்கள் தாக்குதல் நடத்திய போதும், எமது நாட்டின் அப்போதைய தலைவர்களோ அல்லது மகா சங்கத்தினரோ வீதியில் இறங்கி போராடவில்லை. சிங்கள தலைமைகளின் முதுகெலும்பற்ற தன்மையினாலும், மகா சங்கத்தினரின் மௌனத்தினாலுமே அவை அனைத்தும் அமுக்கப்பட்டுப் போயின.


நாட்டைப் பொறுப்பேற்ற தலைவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இறுதியில் எமது மக்களுக்கு என்ன கிடைத்தது? ஸ்ரீ மகா போதியை தரிசிக்கச் சென்ற அப்பாவி சிங்கள மக்கள் டி-56 ரக துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


கதிர்காமத்துக்குச் சென்ற போதும், தலதா மாளிகையில் தாக்குதல் நடத்திய போதும் சிங்கள மக்கள் கொல்லப்பட்டனர். அன்று எமது தேரர்கள் ஏன் வீதியில் இறங்கி நியாயம் கேட்கவில்லை? தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டாலும், அவரது ஆதரவாளர்கள் உலகெங்கும் இன்னமும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட இருநூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்காக அவர்கள் போராடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக பிரசாரம் செய்கிறார்கள்.

ஆனால், சிங்கள தேசத்துக்கும் பௌத்த சாசனத்துக்கும் ஏற்பட்ட அழிவுகளுக்கு யார் குரல் கொடுப்பது? எனவே, இந்த நாட்டுக்கு முதுகெலும்புள்ள வலுவான தலைவரொருவர் அவசியமாகிறது. ஜனசெத பெரமுன கட்சியின் பௌத்த துறவி ஒருவரின் தலைமையிலான ஆட்சியே இந்த நாட்டுக்கு தேவையாகும்.

இன்று கஞ்சி பான போன்ற ஒரு குற்றவாளியின் தொலைபேசி அழைப்புக்கே பாதுகாப்பு அமைச்சும் பொலிஸாரும் பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று தசாப்த கால ஈழ யுத்தம் நடந்த காலத்தில் இவர்கள் இருந்திருந்தால் பயத்தில் உறைந்து போயிருப்பார்கள்.

அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்டது போல, நாட்டில் உள்ள ஏனைய வன்முறை கும்பல்களையும் அடக்க வேண்டும். எனவே, அரசாங்கம் உடனடியாக சிங்கள மக்களையும், பௌத்த சாசனத்தையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button