ஈரானை தாக்க போவதாக நேற்று அறிவித்து இருந்த நிலையில், ஈரானுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டிருந்த தா*க்குதல்களைத் தான் ரத்து செய்து விட்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானுடன் விரைவாக ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்றால், ஈரானுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களைத் தான் ரத்து செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் தொடர வழிவகுக்கும் வகையில் இராணுவ நடவடிக்கையை “ஒத்திவைக்குமாறு” ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கை இஸ்ரேலுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) “உடனடியாக” மீண்டும் திறக்கப்படுவதும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் அடங்கும் என்று டிரம்ப் தெரிவித்தார். உடன்படிக்கைக்கான எல்லைகள் (அடிப்படைகள்) ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டதாக அவர் உரிமை கோரியுள்ள போதிலும், ஒப்பந்தம் எட்டப்பட்டதை ஈரான் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
ஈரானுக்கு எதிராக மேலதிக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து வாஷிங்டன் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது. அமெரிக்க இராணுவம் “தயார் நிலையில்” (locked and loaded) உள்ளபோதிலும், இராஜதந்திர தீர்வுக்கு அவகாசம் அளிப்பதற்காகவே தாக்குதல்களைத் தாமதப்படுத்த தீர்மானித்ததாக டிரம்ப் கூறினார்.
வாஷிங்டன் பதற்றத்தை அதிகரிப்பதாக முன்னர் குற்றம் சாட்டியிருந்த ஈரான், பிராந்தியம் முழுவதும் மோதல் விரிவடைந்தால் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் நாடுகள் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்திருந்தது.
பதற்றங்கள் அதிகரிக்கும் பட்சத்தில், விமானங்கள் ரத்து செய்யப்படுவது மற்றும் வான்வெளி மூடப்படுவது உள்ளிட்ட சாத்தியமான பயண இடையூறுகளுக்குத் தயாராக இருக்குமாறும், விழிப்புடன் இருக்குமாறும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தும் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றையும் அமெரிக்க அரசாங்கம் விடுத்துள்ளது.



