நாளை முதல் மழை மற்றும் காற்று அதிகரிக்கும்

தற்போது தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை நாளை (6) ஆம் திகதி முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல் மற்றும் சபாரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொணராகலை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.



