சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் தலைவர் மற்றும் அழைப்பாளருக்கு கொ*லைமிரட்டல் கடிதங்கள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது

சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக்க பெரேரா மற்றும் அழைப்பாளர் சுதேஷ் நந்திமால் சில்வா ஆகியோருக்கு ஒரே மாதிரியான இரண்டு கொலைமிரட்டல் கடிதங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்திலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.
கடந்த 5ஆம் திகதி கிடைத்த குறித்த கடிதங்கள், தங்களை “தேசப்பற்று பாதுகாப்புப் படை” என அடையாளப்படுத்திக் கொள்ளும் குழுவொன்றினால் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு எதிராக செயற்படுவதாக குற்றஞ்சாட்டி, தங்களது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கடிதங்களில் எச்சரிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சேனக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர்ந்தும் செயற்பட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தப்படும் என இருவருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை பாதுகாவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு கோரிக்கை விடுத்துள்ளது.



