வெளிநாட்டில் வசிக்கும் பாரிய குற்றவாளிகளை கைது செய்யும் போது அழுத்தங்களோ அல்லது அச்சுறுத்தல்களோ விடுக்கப்படுவதில்லை என்பதால் கடும் அதிர்ச்சியில் உள்ள அவர்களின் ஆதரவாளர்கள்… பொலிஸ் மா அதிபர் வெளியிடும் தகவல்கள்

சட்டவிரோதக் கடத்தல்களுக்கு நிதியுதவி செய்து, அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் தற்போது கடும் அதிர்ச்சியில் இருப்பதை அவதானிக்க முடிகிறது என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார.
கண்டி எசல பெரஹராவின் போது மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மல்வத்து மற்றும் அஸ்கிரி மகா நாயக்க தேரர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக அவர் கண்டிக்கு வருகை தந்திருந்த போதே, ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,”வெளிநாடுகளில் ஒழிந்திருக்கும் பலம் வாய்ந்த பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில், சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள 73 பேரை எதிர்வரும் நாட்களில் இலங்கைக்குக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், நூற்றுக்கும் அதிகமான நபர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றம் காரணமாக வெளிநாடுகள் மற்றும் தூதரகங்களின் விசேட பாராட்டுகளும் உயர் மட்ட ஒத்துழைப்பும் கிடைப்பதாக அவர் தெரவித்தார்.
இந்த நடவடிக்கைகளை நிறுத்துமாறு எந்தவிதமான வெளி அழுத்தங்களோ அல்லது அச்சுறுத்தல்களோ விடுக்கப்படவில்லை என்றும், மேலும் சோதனைகளை நடத்துமாறு மட்டுமே கோரிக்கைகள் வருகின்றன என்றும் அவர் இங்கு குறிப்பிட்டார்.
எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் இங்கு வலியுறுத்தினார்.
(ஜே.எம்.ஹாபீஸ்)



