பயண முகவர் நிலையமொன்றில் முகமூடி அணிந்து நுழைந்த மூவர் அங்கிருந்த 60 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பதிவு

தலவத்துகொடையில் உள்ள பயண முகவர் நிலையமொன்றில் இடம்பெற்ற 60 மில்லியன் ரூபா கொள்ளைச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் வேளையில் முகமூடி அணிந்த மூவர் குறித்த நிறுவனத்திற்குள் புகுந்து, அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை கூரிய ஆயுதங்களால் அச்சுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிய வெள்ளை நிற காரில் வந்த இந்தக் கொள்ளைக் குழுவினர், கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுவிட்டு அதே காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேகநபர்கள் முதலில் ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய பின்னரே ரொக்கம் மற்றும் பொருட்களைக் கொள்ளையடித்துள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகியுள்ளதுடன், பொலிஸார் அதனை ஆய்வு செய்து வருகின்றனர்.
கொள்ளையர்கள் 60 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான ரொக்கப் பணம் மற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் அணிந்திருந்த நான்கு தங்கச் சங்கிலிகள், மூன்று தங்க மோதிரங்கள் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தலவத்துகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



