News

ஈரானுக்குச் சொந்தமான ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

அமெரிக்கப் போர்க்கப்பலை ஈரான் இருமுறை தாக்க முயன்றதற்குப் பதிலடியாக, ஈரானுக்குச் சொந்தமான ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது அமெரிக்க மத்திய கட்டளையகம் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஓமன் வளைகுடாவில் ஈரானிய புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்புடைய நான்கு கப்பல்களும், ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவுக்கு அருகே ஒரு கப்பலும் இந்தத் தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டன. இந்த ஐந்து கப்பல்களும் ஈரானிய புரட்சிகர காவல் படைக்கு நிதியளிக்கும் பில்லியன் டொலர் ‘நிழல் வலையமைப்பின்’  ஒரு பகுதி என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தைக் குறிவைத்து ஈரான் 20 ஏவுகணைகளை வீசியது. எனினும், அதில் 18 ஏவுகணைகளைத் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்தான் அறிவித்துள்ளது.

ஈரான் நடத்திய பொலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை அமெரிக்கக் கடற்படைக் கப்பல் வெற்றிகரமாகத் தடுத்ததாகவும், இந்தச் சம்பவத்தில் அமெரிக்க வீரர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் Centcom உறுதிப்படுத்தியுள்ளது.

“அமெரிக்கக் கப்பல்களைத் தாக்க ஈரான் முற்படும் போதெல்லாம், அவர்கள் தங்கள் எண்ணெய் தாங்கிக் கப்பல்களை இழக்க நேரிடும்” என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார்.

அமெரிக்கக் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், குவைத் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களுக்கு அருகில் உள்ள எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் இலக்கு வைக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தியுள்ளது. மேலும், அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எண்ணெய் தாங்கிக் கப்பல்களின் ஊழியர்களையும் உடனடியாக வெளியேறுமாறு ஈரானிய புரட்சிகர காவல் படை உத்தரவிட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து, கடந்த வாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக ஆசியச் சந்தையின் ஆரம்ப வர்த்தகத்தில் மசகு எண்ணெய் விலைகள் திடீரென உயர்ந்துள்ளன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button