செப். 25 முதல் 27 வரை பொல்கொல்ல நீர்த்தேக்கம் வெறுமையாக்கப்படும்: கொத்மலை நீர்மின் உற்பத்தியும் இடைநிறுத்தம்!
கண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கும் பிரதான ஆதாரமான பொல்கொல்ல நீர்த்தேக்கம் எதிர்வரும் 25 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் 27 ஆம் திகதி மாலை 6 மணி வரை முழுமையாக வெறுமையாக்கப்படவுள்ளதாக மகாவலி அதிகார சபை அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அந்த அதிகார சபையின், நீர் முகாமைத்துவ செயலகத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் நிலந்த தனபால இதனை தெரிவித்தார்.
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் மதகுகளில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப் பணிகள் மற்றும் சேதமடைந்துள்ள கொன்கிரீட் கட்டமைப்புகளைப் புனரமைக்கும் பணிகளுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சுமார் இரண்டரை நாட்கள் இந்தச் சீரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கண்டி, திகன மற்றும் பலகொல்ல ஆகிய பகுதிகளுக்கான குடிநீர் விநியோகத்தில் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் நுகர்வோர் மழையையும் பயன்படுத்தி, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் குடிநீரை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், நீர் இருப்பைப் பாதுகாத்து ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.
அதேநேரம், இதற்கு இணையாக, கொத்மலை நீர்மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகளும் எதிர்வரும் 26 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 27 ஆம் திகதி வரை சுமார் 14 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, எல்நினோ காலநிலை பாதிப்புகள் இருந்த போதிலும் நாட்டின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சிறந்த மட்டத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மகாவலி அமைப்பில் மின் உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களில் 61 சதவீதமும், நீர்ப்பாசனப் பணிகளுக்காக நீரை விடுவிக்கும் மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களில் 49 சதவீதமும் (கொள்ளளவில்), நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களில் 48 சதவீதமும் நீர் கையிருப்பில் உள்ளது.
அதேநேரம், தற்போது நாட்டின் பிரதான நீர்மின் உற்பத்தித் தொகுதிகளான மகாவலி, வளவ மற்றும் களனி ஆகிய அனைத்து அமைப்புகளிலும் போதுமான அளவு நீர் இருப்பு நிலவுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



