அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவூதி அரேபிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்

சமூக ஊடகத்தில் பதிவிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்காக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தத் தகவல் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட சப்ரி, மரண தண்டனை விதிக்கப்பட்டமையை இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும், முறையான எழுத்துப்பூர்வ தீர்ப்புக்காக இன்னும் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
“சவூதி அரேபியாவின் இறையாண்மை மற்றும் சட்ட அமைப்பை மதிப்பது என்பது, விகிதாச்சாரத்திற்கு மீறிய தண்டனைக்கு முன்னால் மௌனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல” என்று சப்ரி கூறினார்.
சமூக ஊடகக் கருத்துக்காக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதே அதிகப்படியானது எனக் குறிப்பிட்ட அவர், இத்தகைய செயலுக்கு மரண தண்டனை விதிப்பது “முற்றிலும் விகிதாச்சாரமற்றது, மனிதத்தன்மையற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் கூறினார்.
அனோஜன் சிவராசா அந்தப் பதிவை சில நிமிடங்களிலேயே நீக்கிவிட்டு, பகிரங்க வீடியோ மன்னிப்பும் கோரியிருந்ததாகக் கூறப்படும் தகவல்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்று சப்ரி கூறினார்.
“ஒரு சர்ச்சைக்குரிய கருத்து, ஒரு மனிதன் மனம் திருந்தி, கற்றுக்கொண்டு, தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பைப் பறிப்பதாக அமையக் கூடாது” என்று அவர் குறிப்பிட்டார்.
தனது இஸ்லாமிய நம்பிக்கையைக் குறிப்பிட்ட சப்ரி, மனிதனின் தவறுகளுக்குப் பதிலளிக்கும் போது கருணையும் இரக்கமும் முக்கியமானது என்பதை வலியுறுத்தினார்.
“ஒரு முஸ்லிமாக, அல்லாஹ்வின் கருணையை நான் ஆழமாக நம்புகிறேன். நாம் அவனை அளவற்ற அருளாளனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் போற்றுகிறோம். அந்த விழுமியங்கள் மனிதத் தவறுகளுக்கான நமது பதிலளிப்பிலும் வழிகாட்ட வேண்டும்” என்று அவர் கூறினார்.
மேலும், ஒரு நபரின் விசுவாசம் மற்றும் உண்மையான மனந்திரும்புதல் பற்றிய இறுதித் தீர்ப்பு எல்லாம் வல்ல இறைவனிடமே உள்ளது என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.
அனோஜன் சிவராசாவிற்குப் பலனுள்ள சட்ட உதவியைப் பெற்றுத் தருமாறும், உயர்மட்ட இராஜதந்திர தலையீட்டை உடனடியாக மேற்கொள்ளுமாறும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.
“சவூதி அதிகாரிகள் கருணை காட்டி அனோஜனுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று நான் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்,” என்று சப்ரி கூறினார்.
“நீதியில் கருணைக்கு இடம் இருக்க வேண்டும். அனோஜன் தனது குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பிற்குத் தகுதியானவர்.”
அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ தீர்ப்பு வரும் வரை, மரண தண்டனை பற்றிய தகவல் இலங்கை அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது.



