தொழில்நுட்பத்துறையில் அடுத்த கட்டத்திற்கு நகரும் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் களம் இறங்கினர்

நூருல் ஹுதா உமர்
அடுத்து வரும் சகாப்தம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை நோக்கியதாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் விசேட செயலமர்வு ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
“ஒவ்வொரு சகாப்தத்திலும் மாணவர்களின் இலக்கு காலத்தின் தேவைகளை நோக்கியதாக அமைய வேண்டும். கடந்த காலங்களில் அறிவியல், தொழில்நுட்பம், மொழி மற்றும் தொழில்முறை கல்வி போன்ற துறைகள் முக்கியத்துவம் பெற்றிருந்த நிலையில், எதிர்வரும் காலகட்டம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டதாக அமையவுள்ளது. எனவே மாணவர்கள் இன்றே AI தொடர்பான அறிவு மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது” என நிகழ்வில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப உலகின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த செயலமர்வில் கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால சமூக மாற்றங்களில் உள்ள தாக்கங்கள் குறித்து விரிவான விளக்கங்களும் இதன்போது வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் திறன் வள மேம்பாட்டை நோக்கி இதுபோன்ற நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்விப்பிரிவு பிரதானி அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார்.



