மனைவியுடன் சண்டை பிடித்துவிட்டு உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறி, பிரதேசத்தில் மின் விநியோக தடையை ஏற்படுத்திய நபருக்கு 201,059.90 ரூபா இழப்பீடு வழங்குமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு

மாத்தறை நீதிவான் நீதிமன்றம், உயர் அழுத்த மின் கம்பமொன்றின் மீது ஏறி தனது எதிர்ப்பை வெளியிட்டதால் பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டமைக்காக, இலங்கை மின்சார சபைக்கு (CEB) ரூபா 201,059.90 இழப்பீடு வழங்குமாறு நபர் ஒருவருக்கு உத்தரவிட்டுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாகத் தனது எதிர்ப்பை வெளியிடுவதற்காக, சந்தேகநபர் உயர் அழுத்தப் பிரேசண அமைப்புக்குச் சொந்தமான மின் கம்பமொன்றில் ஏறிய இந்தச் சம்பவம், ஜூலை 21 ஆம் திகதி கம்புருப்பிட்டியவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையினால் திஹகொட, கம்புருப்பிட்டிய, அக்குரெஸ்ஸ, முலதியன, தெய்யந்தர, மாவறல, தெனியாய மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது.
பொலிஸார் சந்தேகநபரின் குடும்பத்தினரை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்ததை அடுத்து, அவர் கீழே இறங்க சம்மதித்தார். அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, ஜூலை 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
ஜூலை 24 ஆம் திகதி, தலைமை நீதிவான், இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நிதி இழப்பைக் கணக்கிடுமாறு கம்புருப்பிட்டிய பொலிஸாருக்கு உத்தரவிட்டார். சந்தேகநபர் ஜூலை 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
ஜூலை 28 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இழப்பு ரூபா 200,000 க்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அந்தத் தொகையை இலங்கை மின்சார சபைக்கு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலதிக விசாரணைகளுக்காக இந்த வழக்கு நவம்பர் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



