தமிழ் பேசும் சிறுபான்மை கட்சிகளின் ஒன்றிணைவு ஆளும் அரசாங்கத்திற்கு ஆபத்தா என பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முபிஸால் அபூபக்கர் கேள்வி ..!

( எம்.என்.எம்.அப்ராஸ்)
தமிழ் பேசும் சிறுபான்மை கட்சிகளின் ஒன்றிணைவு ஆளும் அரசியலுக்கு ஓர் ஆபத்தா? என பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முபிஸால் அபூபக்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமகால அரசியல் நிலை தொடர்பில் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு சிறுபான்மை தமிழ்–முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டமைப்பொன்றை உருவாக்கியிருப்பது இலங்கை அரசியலில் கவனிக்கத்தக்க புதிய நகர்வாகும். இந்த ஒன்றிணைவு வெறுமனே ஒரு அரசியல் கூட்டணி அல்ல. நீண்டகாலமாக தனித்தனியாக முன்வைக்கப்பட்டு வந்த தமிழ்–முஸ்லிம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை ஒரு பொதுவான அரசியல் தளத்தில் முன்வைப்பதற்கான முயற்சியாகவும் இதனைப் பார்க்கலாம். ஆனால், இத்தகைய ஒன்றிணைவு உருவாகியுள்ள சூழலில் தமிழ்–முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் உணர்வுபூர்வமான பல்வேறு பிரச்சினைகள் அரசியல் விவாதங்களின் மையத்திற்கு வருவது கவனிக்க வேண்டிய விடயமாகும்.
இதற்கு கல்முனை ஆதார வைத்தியசாலை தொடர்பாக அண்மையில் எழுந்த ஆடை விவகாரத்தையும் உதாரணமாகக் குறிப்பிடலாம். குறிப்பாக, முஸ்லிம் பெண்களின் சமய ஆடை தொடர்பான பிரச்சினைக்கு அரசு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டிருந்தும், நிரந்தரமான சட்ட அல்லது கொள்கை மாற்றத்தை மேற்கொள்ளாமல் தற்காலிகத் தீர்வாக இடமாற்றம் போன்ற நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகிறது.
ஒரு பிரச்சினைக்கு நிரந்தரமான சட்டரீதியான அல்லது நிர்வாகரீதியான தீர்வு தேவைப்படும் நிலையில், தற்காலிக நடவடிக்கைகள் மூலம் அதனை முடிவுக்குக் கொண்டுவருவது உண்மையில் பிரச்சினையைத் தீர்க்கிறதா அல்லது எதிர்காலத்திற்காக ஒத்திவைக்கிறதா? என்பது மட்டுமல்ல சிறுபான்மை கட்சிகளின் ஒன்றிணைவை சவாலுக்கு உட்படுத்தும் பல பரிட்சையில் அரசு ஈடுபடுகின்றதா?என்ற கேள்வியும் எழுகிறது.அதேவேளை, சமய ஆடை, மதச்சுதந்திரம், மருத்துவத் துறையின் தொழில்முறை ஒழுங்கு, நிர்வாக நடைமுறைகள் மற்றும் பணியிட உரிமைகள் போன்ற விடயங்கள் அனைத்தும் தெளிவான சட்ட மற்றும் கொள்கை அடிப்படையில் அரசினுல் அணுகப்பட வேண்டும். அவை இன–மத முரண்பாடுகளாக மாற்றப்படுவது எந்த சமூகத்திற்கும் நன்மை தராது.
இங்கு ஒரு முக்கியமான அரசியல் உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணையும் போது, அவர்களுக்குள் பிளவை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு உணர்வுபூர்வமான பிரச்சினையும் அந்த ஒன்றிணைவையே பலவீனப்படுத்தக்கூடும்.எனவே, ஒவ்வொரு பிரச்சினையையும் உடனடியாக இன அல்லது மத மோதலாகப் பார்க்காமல், அதன் சட்டப்பின்னணி, நிர்வாக நடைமுறை, மனித உரிமை பரிமாணம் மற்றும் அரசியல் விளைவுகளை ஆழமாக ஆராய வேண்டும். இதில் நடைமுறை அரசுக்கு பாரிய பொறுப்பு உள்ளது. தமிழ்–முஸ்லிம் அரசியல் ஒன்றிணைவு வெற்றி பெற வேண்டுமெனில், பரஸ்பர நம்பிக்கை, சமூகங்களுக்கிடையிலான சமத்துவம், ,பொதுவான அரசியல் குறைந்தபட்சத் திட்டம் ஜனநாயகப் பேரம்பேசல்,சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் மதச்சுதந்திரத்திற்கான அர்ப்பணிப்பு உணர்வுபூர்வமான பிரச்சினைகளில் பொறுப்பான அரசியல் அணுகுமுறை ஆகியவை அவசியம்.
இந்த ஒன்றிணைவு யாருக்கும் எதிரானதாக இருக்கக் கூடாது. மாறாக, இலங்கையின் பன்மைத்துவ ஜனநாயகத்தை வலுப்படுத்தும் அரசியல் சக்தியாக அது வளர வேண்டும். ஆளும் பெரும்பான்மை அரசியலுக்கு உண்மையான சவால் சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைவது மட்டுமல்ல.அந்த ஒன்றிணைவு மக்கள் நம்பிக்கையைப் பெற்று, கொள்கை அடிப்படையிலான வலுவான மாற்று அரசியல் சக்தியாக மாறுவதுதான் உண்மையான சவால். அதேபோன்று, ஆளும் அரசாங்கத்திற்கும் ஒரு முக்கியமான பொறுப்பு உள்ளது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பது சட்டங்களை நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை மட்டுமல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பான நீடித்த பிரச்சினைகளுக்கு தெளிவான, நியாயமான மற்றும் நிரந்தரமான தீர்வுகளை உருவாக்குவதற்கான பொறுப்பையும் வழங்குகிறது. தற்காலிகத் தீர்வுகள் தொடர்ந்து முன்வைக்கப்படும் நிலையில்,அவை அரசியல் நோக்கங்களைக் கொண்டவையா என்ற சந்தேகம் மக்களிடையே உருவாகுவது இயல்பானது.
அந்தச் சந்தேகங்களை அகற்றுவது அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் கொள்கைத் தெளிவின் மூலமே சாத்தியமாகும். எனவே, சிறுபான்மை மக்களின் அரசியல் ஒன்றிணைவு ஒரு ஜனநாயக ஆபத்து அல்ல. மாறாக, அது ஆட்சியின் பொறுப்புணர்வையும் ஜனநாயகப் பேரம்பேசலையும் அதிகரிக்கும் ஒரு வாய்ப்பாக இருக்க முடியும்.
அந்த வகையில் பெரும்பான்மை அரசு பிரச்சினைகளை உருவாக்கி பிரிப்பதைவிட, பிரச்சினைகளை நியாயமாகத் தீர்த்து ஒன்றிணைப்பதே இலங்கையின் எதிர்கால அரசியலுக்குத் தேவையாகும், என பேராதனை பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முபிஸால் அபூபக்கர் தெரிவித்தார்.



