2030 ஆம் ஆண்டளவில் தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் டாலராக உயர்த்துவோம் – அமைச்சர் சமந்த வித்யாரத்ன
2030 ஆம் ஆண்டளவில் தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் டாலராக உயர்த்துவதற்கு ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம்: அமைச்சர் சமந்த வித்யாரத்ன
தேயிலைத் தொழிலை மேம்படுத்துவதற்காக அது தொடர்பான அனைத்து பங்குதாரர்களையும் இணைத்து ஐந்தாண்டு மூலோபாயத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் வரை உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் தேயிலை ஏற்றுமதி வருமானம் 1.5 பில்லியன் டாலராக இருந்ததாகவும், இதன்படி அடுத்த mini வருட காலத்திற்குள் ஏற்றுமதி வருமானத்தை மேலும் ஒரு பில்லியன் டாலரினால் அதிகரிக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் அறுவடை செய்யப்பட்ட தேயிலையின் முதற்பலனை ஸ்ரீ தலதா மாளிகைக்கு பூஜை செய்யும் தேசிய புதிய தேயிலை மங்கள விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தேயிலைத் தொழிலின் முன்னேற்றத்தை வேண்டி நடத்தப்படும் இந்த தேயிலை அறுவடை பூஜை வழிபாடானது, 2014 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சடியாக நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் சமந்த வித்யாரத்ன மேலும் கூறியதாவது:
“தேயிலைத் தொழிலுக்கு வரலாற்றிலிருந்தே சவால்கள் இருந்துள்ளன. தற்போதைய சூழலிலும் எதிர்காலத்திலும் அந்த சவால்களுக்கு நாம் முகம்கொடுக்க நேரிடும். ஆனால், ‘சிலோன் டீ’ (Ceylon Tea) சுவையை உலகம் கைவிடத் தயாராக இல்லை. நாம் 2024 இல் ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய வருடங்களை எடுத்துக்கொண்டால், இலங்கையின் மொத்த முடிவுற்ற தேயிலை ஏற்றுமதி 264 மில்லியன் கிலோகிராமாக இருந்தது. கடந்த வருடத்தில் முடிவுற்ற தேயிலை ஏற்றுமதி அளவை மேலும் 20 இலட்சம் கிலோகிராமாக அதிகரிக்க முடிந்தது. நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்துரையாடி ஐந்தாண்டு மூலோபாயத் திட்டமொன்றை உருவாக்கினோம். எனது தலைமையில் ஒவ்வொரு மாதமும் இந்த குழு கூடுகிறது. 2030 ஆம் ஆண்டளவில் முடிவுற்ற தேயிலை ஏற்றுமதியை 400 மில்லியன் கிலோகிராம் வரை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.”
தேயிலை என்பது ஒரு பானம் மட்டுமல்லாமல், அதுவொரு பெரிய கலாச்சாரமாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர்; பௌதிக ரீதியாக அனுராதபுரம், பொலன்னறுவை, சிகிரியா, தம்புள்ளை, கண்டி போன்ற நகரங்கள் உலக பாரம்பரிய தளங்களாக விளங்குவதுடன், சுற்றுச்சூழல் ரீதியாக மத்திய மலைநாடும் சின்ஹராஜ வனமும் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.
தேயிலைக் கலாச்சாரத்தை முதன்முறையாக உலகப் பாரம்பரியமாக அங்கீகரிக்குமாறு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பிற்கு சமர்ப்பித்துள்ளதாகவும், அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டு வருவதாகவும் வெளிப்படுத்திய அமைச்சர், உலகப் பாரம்பரியமாகக் கருதப்படும் தேயிலைக் கலாச்சாரத்தின் கலாச்சார விழாவே அன்று தலதா மாளிகையில் கொண்டாடப்பட்டதாகத் தெரிவித்தார்.
நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் இந்தத் தொழில்துறையின் கீழ், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களிலேயே அதிகளவிலான ஏற்றுமதி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன், அந்த ஏற்றுமதிகளுக்குள் தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 451.58 மில்லியன் டாலராக உயர்த்த முடிந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தவிர, “பிவிதுரு தலு கிரியான்கிதய” (தூய கொழுந்து நடவடிக்கை) என்ற பெயரில் புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், இதன் கீழ் 500 ‘சிலோன் டீ’ கிராமங்களை நிறுவுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் உள்ள 7 தேயிலை வலயங்களில் காலநிலை மற்றும் காலநிலை மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், தற்போது 180,000 சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு தேயிலை மானியத்தை வழங்க முடிந்துள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், இதற்காக 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் கூறினார்.
அத்துடன், மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்ததன் படி, சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு கூடுதல் உரம் மானியத்தை வழங்குவதற்காக திறைசேரியிலிருந்து 2500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்க, கண்டி முதல்வர் சந்திரசிறி விஜேநாயக்க, அமைச்சின் செயலாளர் குணதாசி சமரசிங்க, தேயிலை சபையின் தலைவர் ராஜ் ஒபேசேகர, தேயிலை ஆணையாளர் எம்.கே. ஜயவர்தன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


