ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பி வந்த பொலிஸ் அதிகாரி – கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில் சிக்கினார்

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பொலிஸ் அதிகாரி ஒருவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (31) மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது குறித்த அதிகாரி கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பிரச்சாரங்கள் தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், விசாரணைகள் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
விசாரணைகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட அதிகாரி, எம்பிலிப்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பணியாற்றியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி இன்று (31) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.



