“நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டாம்..” – சர்வதேச நீதிபதிகள் சங்கத்திடமிருந்து இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை!

இலங்கையின் உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்களால் நீடிப்பதற்காக அரசாங்கம் கொண்டுவரவுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் சங்கம் (IAJ) தனது பலத்த கவலையை வெளியிட்டுள்ளது.
ரோமில் அமைந்துள்ள அச்சங்கத்தின் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இக்கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 93 நாடுகளின் நீதிபதிகள் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்ற அமைப்பான IAJ, நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதே தமது அமைப்பின் முதன்மை நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய சட்டத் திருத்தமானது நீதித்துறையின் சுயாதீனத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த முன்மொழியப்பட்ட திருத்தம் தொடர்பாக இலங்கை நீதிச்சேவை சங்கம் மற்றும் காமன்வெல்த் சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரும் எழுப்பியுள்ள தீவிரக் கவலைகளுடன் தாம் உடன்படுவதாக சர்வதேச நீதிபதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இவ்வாறானதொரு அரசியலமைப்பு திருத்தத்தை அவசரமாகவும் தன்னிச்சையாகவும் செய்யாமல், முறையான கொள்கை மற்றும் கலந்தாய்வு செயல்முறையின் ஊடாக மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். அவ்வாறு செய்யத் தவறுவது நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிக்கும் என்பது அவர்களின் கருத்தாகும்.
மேலும், குறிப்பிட்ட ஒரு நீதிபதிக்கு அல்லது குழுவிற்கு தனிப்பட்ட ரீதியில் நன்மையளிக்கும் நோக்கில் இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுவதாக அவதானிகளிடையே நிலவும் கருத்து குறித்தும் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் உண்மை நோக்கம் எதுவாக இருந்தாலும், இத்தகையதொரு எண்ணம் ஏற்படுவது கூட நீதித்துறை அமைப்பின் சுயாதீனத்தைக் குறைத்து மதிப்பிட வழிவகுக்கும் என IAJ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எனவே, நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்தம் குறித்து மீண்டும் பரிசீலிக்குமாறு சர்வதேச நீதிபதிகள் சங்கம் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கையில் நிலவும் இந்த சூழ்நிலையை தாம் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிப்போம் என்றும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.



